தேய்பிறை அஷ்டமி பைரவ காயத்ரி மந்திரம் வழிபாடு
தேய்பிறை அஷ்டமியில் பஞ்ச தீபம் ஏற்றி வழிபட்டால் காலத்தினால் தீர்க்க முடியாத தொல்லைகள் நீங்கும். நல்லருள் கிட்டும்.
நவகிரகங்களால் ஏற்படும் கால சர்ப்ப தோஷம், நாக தோஷம் முதலியவை பைரவரை வழிபட நிவர்த்தி ஆகும். அஷ்டமி திதியில் அஷ்ட லஷ்மிகளும் பைரவரை வழிபடுவதாக ஐதீகம்.
கஷ்டங்ளை போக்கும் பைரவ காயத்ரி மந்திரம்
ஓம் ஷ்வானத் வஜாய வித்மஹே
சூல ஹஸ்தாய தீமஹி
தன்னோ பைரவ ப்ரசோதயாத்…
இந்த காயத்ரியை அஷ்டமி வழிபாடு தினத்தில் 108 முறை சொல்லலாம்.
ஸ்லோகம் :
ஓம் கால காலாய வித்மஹே!
காலஹஸ்தாய தீமஹி
தன்னோ கால பைரவ ப்ரச்சோதயாத்
பைரவர் என்றாலே பயத்தை நீக்குபவர், அடியார்களின் பாவத்தை நீக்குபவர் என்று பொருள். எல்லா சிவ தலங்களிலும், ஈசான்ய மூலை எனப்படும் வடகிழக்கு திசையில் நீல மேனியாக அருள் தருபவர் பைரவர். பைரவருக்கு மிளகு கலந்த அன்னம் மற்றும் வடை நைவேத்தியமாக படைக்கலாம். அனுமனுக்கு வடைமாலை சாற்றுவது போல், பைரவருக்கும் வடைமாலை சாற்றி வழிபடுவது கூடுதல் பலன்களைத் தரும்.
தேய்பிறை அஷ்டமி வழிபாடு ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறையில் அஷ்டமி திதி அன்று பைரவ வழிபாடு செய்ய உகந்தது ஆகும். அந்நாள் பைரவாஷ்டமி என்று வழங்கப்படுகிறது. அதிலும் தேய்பிறை அஷ்டமி கால பைரவாஷ்டமி என்று வழங்கப்பட்டு சிறப்பு பெறுகிறது. சிவாலயங்களில் முதல் வழிபாடு விநாயகருக்கு என்றால் இறுதி வழிபாடு பைரவருக்கு.
ஸ்ரீ காலபைரவருக்கு சிறப்பான தேய்பிறை அஷ்டமி
ஒவ்வொரு பெளர்ணமிக்கு பின் வரும் அஷ்டமி தேய்பிறை அஷ்டமி ஆகும். அந்த நாள் ஸ்ரீ காலபைரவருக்கு மிகவும் உகந்த நாள் ஆகும். அப்போது நம் குறை தீர வேண்டிக் கொண்டு ஸ்ரீ காலபைரவருக்கு விரதம் மற்றும் வழிபாடு நடத்தினால் மிக சிறப்பான பலன்களை வாரி வழங்குவார்.
ஸ்ரீ காலபைர் விரத முறை
அஷ்டமி அன்று அதிகாலையில் குளித்து வீட்டில் விளக்கேற்றி பைரவரை நினைத்து வழிபாடு நடத்த வேண்டும். பகலில் ஏதாவது ஒரே ஒரு முறை மட்டும் சாப்பிட வேண்டும். சிவன் கோயிலுக்கு சென்று, அங்கிருக்கும் பைரவருக்கு பஞ்சதீபம் ஏற்றி வழிபாடு நடத்தலாம். பஞ்ச தீபம் என்றால் இலுப்பை எண்ணெய், விளக்கு எண்ணெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், பசு நெய் ஆகியவற்றை தனித்தனியாக ஏற்ற வேண்டும்.
இந்த ஐந்தையும் ஒன்றிலிருந்து மற்றொன்றை ஏற்றக்கூடாது. தனித்தனியாக ஏற்றுவது நல்லது. மாலையில் பைரவருக்கு வடை மாலை சாற்றி வழிபடுவதும், தயிர் சாதம் செய்தும், சர்க்கரைப் பொங்கல் படைத்து குழந்தைகளுக்கு, பக்தர்களுக்கு வழங்கினால் நல்லது.
உங்கள் கருத்து : comment