பொங்கல் பண்டிகையும் சூரிய கடவுள் வழிபாடும்!
தைப் பொங்கல் அன்று சூரிய உதயத்தின் போது, "பொங்கலோ பொங்கல்" என் மனம் பொங்க கூவி மகிழ்ந்து பொங்கல் வேகவைத்து, பொங்கிய பொங்கலை 3 தலைவாழை இலையில் இட்டு, அத்துடன் பழங்கள், இனிப்பு வகைகள், கரும்பு, முதலியவற்றை கொண்டு அர்ச்சித்து, தூபதீபம் காட்டி சூரியபகவானை..
Pongal 2022 : தைப் பொங்கல் அன்று சூரிய உதயத்தின் போது, "பொங்கலோ பொங்கல்" என் மனம் பொங்க கூவி மகிழ்ந்து பொங்கல் வேகவைத்து, பொங்கிய பொங்கலை 3 தலைவாழை இலையில் இட்டு, அத்துடன் பழங்கள், இனிப்பு வகைகள், கரும்பு, முதலியவற்றை கொண்டு அர்ச்சித்து, தூபதீபம் காட்டி சூரியபகவானை வணங்கி வழிபாடு செய்ய வேண்டும். தீபாராதனை காட்டும் போது குலதெய்வத்தையும், மூதாதையர்களையும் நினைத்து பிரார்த்தனை செய்ய வேண்டும்.
விவசாயி, உலக மக்களின் இயற்கைத் தெய்வமாகக் கருதப்படும் சூரியனுக்கும், மற்ற ஜீவராசிகளுக்கும் சொல்லும் ஒரு நன்றியறிதலாகக் பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது.
இந்து மதத்தில் இந்த பண்டிகை கடவுளான சூரிய தேவனுக்கும் இயற்கைக்கும் அர்ப்பணிக்கப்பட்டது. சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பொங்கல் பண்டிகை அன்று உழவர்கள் தங்களது உழைப்பால் விளைந்த பொருட்களான மஞ்சள், இஞ்சி, கரும்பு, வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம் போன்றவற்றைப் படைத்து புதுப்பானையில் பச்சரிசி பொங்கலிட்டு பால் பொங்கும் போது 'பொங்கலோ பொங்கல்' என மகிழ்ச்சியுடன் கூறி சூரிய பகவானை வணங்குவர்.
பழங்காலத்தில் சூரிய வழிபாடு முதன்மையானதாகக் கருதப்பட்டது. சூரியன் அனைத்து மதத்தினரும் வழிபடும் கண்கண்ட தெய்வம். சூரியன் கிழக்கில் உதயமாகி அருள்புரிகிறார் என்பது மரபு. ஆனால், இப்போது கோயில்களில் பரிவார தெய்வங்களில் ஒருவராகத் தான் சூரிய தேவன் திகழ்கிறார்.
தைப் பொங்கல் வழிபாடு மற்றும் வழிபடும் முறை
பொங்கல் பண்டிகை அன்று பெண்கள் சூரியன் உதிப்பதற்கு 5 நாழிகைக்கு முன்பு எழுந்து உடல்சுத்தி செய்து, நீராடிவிட்டு, வீட்டு முற்றத்தில் நீர் தெளித்து கோலமிட வேண்டும். வீட்டின் முற்றத்தில் ஒரு பகுதியை பசு சாணத்தால் மெழுகி, வெள்ளையடித்து, காவி பூச வேண்டும். அரக்கு நிறம் துர்க்கா தேவிக்குரியது. துன்பங்கள் விலகி மங்கல வாழ்வும், இன்பமும் நிலைக்கதான் காவி பூசப்படுகிறது.
அதன் பிறகு அந்த பகுதியை மாவிலை, வாழை, கரும்பு மற்றும் மலர்களால் அலங்கரித்து, பிள்ளையாரை மஞ்சளினால் பிடித்து வைக்க வேண்டும். பின்னர் குத்து விளக்கேற்றி, பூரண கும்பம் வைத்து வெற்றிலை, பாக்கு, தேங்காய் முதலிய மங்கல பொருட்களையும் வைத்து படைக்க வேண்டும்.
விநாயகரை முதலில் மனதில் நினைத்து, இஷ்டதெய்வங்களை பிரார்த்தனை செய்ய வேண்டும். ஒரு புதுப்பானையை எடுத்து அதன் வாய்ப்புறத்தில் மஞ்சள் இலை, மாவிலை கட்ட வேண்டும். பானையின் மேல்புறத்தில் திருநீறை குழைத்து, 3 இடங்களில் பூசி, சந்தனம், குங்குமத்தால் திலகமிடவேண்டும்.
பானைக்குள் பசும்பாலும், நீரும் விட்டு நிரப்பி தூபதீபம் காட்டி, கற்பூரதீபத்தினால் அடுப்பில் நெருப்பை பற்ற வைக்க வேண்டும். பின்னர் தம்பதியராக சேர்ந்து சூரியனை வணங்கி, இஷ்டதெய்வங்களை பிரார்த்தனை செய்து பானையை தூக்கி அடுப்பில் வைக்க வேண்டும். பானையில் பால் பொங்கி வரும் போது பொங்கலோ, பொங்கல் என்று குரல் எழுப்பிக்கொண்டே பச்சரிசியை இருகைகளாலும் அள்ளி போட வேண்டும். பின்னர் சூரியபகவானை வணங்கியபடி பானையை 3 முறை சுற்றி மூட வேண்டும்.
சூரிய பகவானுக்கு படையல்: பொங்கிய பொங்கலை 3 தலைவாழை இலையில் இட்டு படைத்து பழங்கள், கரும்பு, இனிப்பு முதலியவற்றை கொண்டு அர்ச்சித்து, தூபதீபம் காட்டி சூரியக்கடவுளை வணங்கி வழிபாடு செய்ய வேண்டும்.
உங்கள் கருத்து : comment