Aruvamum Uruvamaki Anathiyai Kandhapuranam Song Lyrics | அருவமும் உருவமாகி அநாதியாய்
திருமுருகன் துதி
'அருவமும் உருவமாகி அநாதியாய்ப்
பலவா யொன்றாய்ப்
பிரம்மமாய் நின்ற சோதிப்பிழம்பதோர்
மேனியாகக்
கருணைகூர் முகங்களாறும்
கரங்கள் பன்னிரண்டுங்கொண்டே
ஒரு தின முருகன் வந்தாங்
குதித்தனன் உலகமுய்ய'
வேல்முருகனின் அழகிய தோற்றம் பற்றி கந்தபுராணம் தெரிவிக்கிறது. இந்திராதி தேவர்களைக் கொடுமைப்படுத்திய சூரபத்மனிடமிருந்து அவர்களைக் காக்க, சிவபெருமானின் நெற்றிக்கண்ணிலிருந்து தோன்றியவரே வேல்முருகன். ஆறு குழந்தைகளாகத் தோன்றியவரை கார்த்திகைப் பெண்கள் எடுத்து வளர்த்துவந்தனர். இதனாலேயே முருகன், `கார்த்திகேயன்’ என்று ஆனார். சூரனை வதைப்பதற்கான காலம் வந்ததும், அன்னை பராசக்தி ஆறு பிள்ளைகளை அள்ளி அணைத்து, ஒன்றாக்கி ஒரே உருவாக ஆக்கினார். ஆறு முகங்களும், பன்னிரு கரங்களும் என ஸ்கந்தர் உருவானார். உலகில் உள்ள சகல ஜீவராசிகளும் தாயிடம் இருந்து உருவாக, முருகன் ஒருவரே தந்தையின் மூலம் உருவானார்.
கந்த புராணம்
Sri Kandha Puranam
தமிழில் முருகன் மீது பாடப்பட்ட பேரிலக்கியங்களுள் தலையானது கந்தபுராணம். இந்நூல் காஞ்சிபுரம் குமரக் கோட்டத்தில் அர்ச்சகராக இருந்த கச்சியப்ப சிவாசாரியார் என்ற அருளாளரால் இயற்றப்பட்டது. வடமொழி ‘ஸ்காந்த’த்தை இவர் தமிழில் செய்துள்ளார். ‘திகடசக்கர’ என்று முருகப் பெருமானே அடி எடுத்துத்தர இவர் இந்நூலைப் பாடினார் என்பர். கம்பனின் இராமகாதைப் போக்கில் இணைக்காப்பியமாக இந்நூல் அமைந்துள்ளது.
இந்நூல் ஆறு காண்டங்களைக் கொண்டுள்ளது. முருக பக்தர்களால் இந்நூல் பாராயண நூலாகக் கொள்ளப்பட்டு வருகிறது. சைவ வழிபாடும் முருக வழிபாடும் வேறன்று: ஒன்றே என்பதை ஆசிரியர் இந்நூலில் விரித்துரைத்துள்ளார். சிவன், உமை ஆகியோர் பெருமைகளையும் இந்நூல் விரிவாகப் பேசிக் காட்டுகிறது.
உங்கள் கருத்து : comment