சங்கிலிக் கருப்பனே சாம்பிராணி வாசனே | Sangili karuppane sambirani vasane song lyrics Tamil
சங்கிலிக் கருப்பனே சாம்பிராணி வாசனே
சகமாளும் என் ஐயனே
அழகான கொண்டையும் அகண்ட பெருநெற்றியும்
அதிரூப மான வடிவம்
மதி போன்ற முகமும்
மாலைகள் அணிமார்பும்
மலர்ந்த உன் பார்வை யழகும்
துடுக்கான மீசையும் எடுப்பான தோள்களும்
துடிக்கின்ற வாளின் ஒளியும்
கருப்புநிறக் கச்சையும் காலில் சலங்கையும்
கருணை பொழிகின்ற திறமும்
கண்ணனே மாயனே கார்முக வண்ணனே
கண்டவர் மெய் சிலிர்க்கும்
ஊதாரியாகி பல ஊரெல்லாம் சுற்றியும்
உன்னை நான் மறக்கவில்லை
கையெலாம் நோகவே கடுமையாய் பணிசெய்தும்
கவலைவிட் டகல வில்லை
நாடெல்லாம் சுற்றி நான் மாடாக உழைத்துமே
நன்மையது சேர வில்லை
நெஞ்சார உன்னை நான்நேசித்து வாழ்கிறேன்
நின் கருணை கிட்டவில்லை
குலதெய்வ மென்றுனைக் கொண்டாடி மகிழ்ந்தாலும்
குறைகளது மறைய வில்லை
பொல்லாத ஆசையால் புரியாத கவலையால்
பேதை நான் வாடு கின்றேன்
எக்காலமும் உன்னை ஏற்றியே தொழுகின்ற
ஏழைக் கிரங்கி அருள்வாய்
கோடானு கோடிபிழை செய்யினும் நீ என்னை
கொண்டாதரிக்க வேணும்
வறுமையதில் வாடாமல் வஞ்சமனம் இல்லாமல்
வாழவழி சொல்ல வேணும்
அன்புக்கு என்றுமெனை அடிபணிய வைத்து நீ
ஆட்கொண்டு அருள வேணும்
அதிகாரம் கண்டு நான் அஞ்சாமல் வாழ்ந்து
அருங்கழல் சேர வேணும்
பிள்ளை நான் உந்தனது பாதார விந்தமை
பிரியமுடன் வணங்க வேணும்
எனது குலம் முழுவதும் உனதடிமை ஆனபின்
இரங்காதிருக் கலாமோ
கவலையைச் சொல்லுமென் கண்ணீரைப் பார்த்து
நீ கல்லா யிருக் கலாமோ
காத்தருளும் தெய்வமுன் கருணையில்லா விடின்
கதி என்ன ஆகு மய்யா
தஞ்சமென்று உனை நம்பி வந்தவர் தமக்
கெல்லாம் தயை புரிய வேணுமையா
கருப்பா என்றுனைக் கரங்கூப்பி அழைத்
திட்டால் காக்க வர வேணுமய்யா!
உங்கள் கருத்து : comment